வைத்திய அத்தியட்சகரின் உரிய அனுமதி இன்றி வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவரை கல்முனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த வைத்தியசாலையில் இருவர் அனுமதி இன்றி உட்பிரவேசித்ததாக அங்கு பாதுகாப்பு பணிக்கு பொறுப்பான அதிகாரியினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய இருவரையும் கைது செய்த கல்முனை பொலிசார் விசாரணை நடாத்தி வந்தனர்.
மேலும் கைதானவர்கள் கல்முனை மாநகரில் உள்ள பிரபல ஆடையகம் ஒன்றின் பணியாளர்கள் என பொலிசாரின்
விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வைத்தியசாலை பணிப்பாளரின் முன் அனுமதி இன்றி சுத்தியலுடன் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து குறித்த வைத்தியசாலையில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடி முரண்பாடான கருத்துக்களை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் தெரிவித்துள்ளதாக பொலிசார்
தெரிவித்தனர்.
எனினும் கைதானவர்கள் வழமை போன்று தாங்கள் புதிய ஆண்டிற்கான கலண்டர்களை அரச தனியார் திணைக்களங்களுக்கு வழங்குவதற்காக சென்றதாகவும் அதன் போது இவ்வாறான நிலைமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் குறித்த வைத்தியசாலை பணிப்பாளர் விசாரணை ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.