![](https://tamilrelaksnews24.com/wp-content/uploads/2024/12/meeting-1.jpg)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் அபிவிருத்தி பணிகளின்போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட 725மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 25மில்லியன் ரூபாய்களாக பிரிக்கப்பட்டு எந்தவித ஒப்பந்த விண்ணப்பக் கோரல்களும் இல்லாமல் முறைகேடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது, அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, மாவட்டத்தில் இடம்பெற்றதாக கருதப்படும் காணி மோசடிகள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வனவிலங்கு பிரச்சினைகள், நீர்பாசனம், கனிய வள அகழ்வு, அனர்த்த முன்னாயத்த செயற்பாடுகள், கல்வி, சுகாதாரம், மீன் பிடி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி விடயங்கள், ஏனைய அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.