![](https://tamilrelaksnews24.com/wp-content/uploads/2024/12/Marines-1.jpg)
இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி நுழைந்தால் அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கைக் கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
2024ஆம் ஆண்டில் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் 554 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு 72 கடற்றொழில் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய கடற்றொழிலாளர்களை தடுப்பதற்காக நாம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அந்தவகையில், இந்த ஆண்டில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது 554 பேரை எல்லை தாண்டிய குற்றத்துக்காக கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்காக கையளித்துள்ளோம்.
அதேபோன்று, எல்லை தாண்டிய மற்றும் சட்டவிரோதமான கடற்றொழில் முறைமைகளைக் கொண்ட 72 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளோம்.
விசேடமாக, அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து நாம் உயிர்ச் சேதங்கள் இடம்பெறாத வகையில் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இலங்கையின் கடற்பரப்பினையும், வளங்களையும், கடற்றொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எம
க்குள்ளது.
அந்த வகையில் தான் நாம் அத்துமீறி எல்லை தாண்டுபவர்கள் மீது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
எனினும், எல்லை தாண்டுபவர்கள் மீது தொடர்ந்தும் நாம் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். ஆகவே, இந்திய கடற்றொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகளை கைவிடுவதோடு அத்துமீறி இலங்கை கடற்பரப்பு எல்லைக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுகின்றோம்” குறிப்பிட்டுள்ளார்.