புத்தாண்டு தினத்தின் அதிகாலை 6.00 மணியுடன் நிறைவுபெற்ற ஒருவார காலப்பகுதியில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் வழக்கு பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கமைய கடந்த டிசம்பர் 23ஆம் திகதி தொடக்கம் பொலிசார் விசேட போக்குவரத்துக் கண்காணிப்பு நடவடிக்கையொன்றை ஆரம்பித்திருந்தனர்.
இதன்போது கடந்த ஒருவார காலத்துக்குள் 7264 போக்குவரத்து விதிமீறல் சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவற்றில் மதுபோதையில் வாகனம் செலுத்தல் 529, ஆபத்தான மற்றும் அலட்சியமாக வாகனம் செலுத்தல் 57, அதிவேகத்தில் வாகனத்தில் செலுத்தல் 54, வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறிய சம்பவங்கள் 1057, சாரதி அனுமதிப்பத்திர முறைகேடு சம்பவங்கள் 614, மற்றும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் 4953 சம்பவங்கள் என்ற வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே புத்தாண்டு தினத்தின் இரவு நேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.